Monday, June 15, 2015

கமல்; ‘தலைவன் இருக்கிறான்’ படவேலைகள் ஆரம்பம்!


தூங்காவனம் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் அடுத்தப் பட வேலையையும் ஆரம்பித்துவிட்டார் கமல் ஹாசன். தமிழில் தலைவன் இருக்கிறான், ஹிந்தியில் அமர் ஹை என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமர் ஹை படம் மூலமாக 18 வருடங்களுக்குப் பிறகு ஹிந்தி படத்தை இயக்கவுள்ளார் கமல். இதில் சயிஃப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார். தெலுங்கு, மலையாள திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்களும் நடிக்கவுள்ளார்கள். சாச்சி 420-க்குப் பிறகு கமல் இயக்கும் ஹிந்திப் படம் இது.
இதற்கு முன்பு, உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு தலைவன் இருக்கிறான் என்றுதான் முதலில் தலைப்பு வைத்தார் கமல். ஆனால், கதைக்கு அது பொருத்தமாக இல்லாததால் அந்தத் தலைப்பை இப்போது பயன்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தை வீரேந்திர கே. அரோரா, அர்ஜுன் என். கபூர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அவர்கள் இப்படம் குறித்து கூறும்போது, ‘இந்தப் படம், பல விதங்களில் எங்களுக்கு விசேஷமானது. நீண்ட நாள்கள் கழித்து கமல் ஹாசன் பாலிவுட்டுக்குத் திரும்புகிறார். இதில் நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பல துறைகளில்  பணியாற்றவுள்ளார். கடந்த 6 வருடங்களாக இந்தக் கதையை எழுதிவருகிறார். ஆரம்பம் முதலே சயிஃப் அலி கான் தான் நடிக்க வேண்டும் என நினைத்துள்ளார்’ என்றனர்.
தலைவன் இருக்கிறான் படத்தில் கமல் வில்லனாக நடிக்கவுள்ளார். இதைப் பற்றி அவர் கூறும்போது, ‘எனது பாத்திரம் வழக்கமான எதிர்நாயகனாக இல்லாமல் புதிய கோணத்தைத் தரும்’ என்றார்.
பாலிவுட்டுக்கு மீண்டும் திரும்புவது பற்றி கமல் ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘என் செளகரியப்படி ஹிந்திப் படம் இயக்கவே விருப்பம். சொல்லப்படவேண்டிய கதைகளைச் சொல்ல நான் விருப்பப்படும் தருணம் இது. ஹிந்திப் படங்கள் பண்ண எனக்கு விருப்பமே. என்னால் அதிகமான ரசிகர்களைச் சென்றடையமுடியும்.’ என்று கூறியுள்ளார். 
கமல் நடிப்பில் அடுத்ததாக நான்கு படங்கள் வெளிவரவுள்ளன. பாபநாசம் விரைவில் வெளியாகும். அடுத்ததாக விஸ்வரூபம் 2 வெளியாகலாம். அதன்பிறகு தூங்காவனம், தலைவன் இருக்கிறான் என அடுத்தடுத்து 4 படங்கள் வெளியாகவுள்ளன.

No comments:

Post a Comment